தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த மத்யார்ஜுனம் என்று போற்றப்படும் திருவிடைமருதூர் என்னும் சிறப்பான க்ஷேத்திரத்திற்கு அருகில் இருக்கும் திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் தோன்றியவர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் ஆந்திரத்திலிருந்து வந்து குடியமர்ந்த காகர்ல என்னும் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது குலப் பெயரே ஸ்ரீதர என்பது. வெங்கடேசன் என்பது இவரது பெயர். ஆனால் பிற்காலத்தில் ஐயாவாள் என்றாலே அது இவரைத்தான் குறிப்பிடுவதாக ஆயிற்று. இவரது குடும்பம் சிவ ஆராதனை செய்து வேத விற்பனர்களாக திகழ்ந்தனர். குடும்பத்தின் மூலமாக இவரிடம் வளர்ந்த சிவபக்தியானது, சிவனை ஏகாக்ரமான சிந்தனையில் பூஜிக்கச் செய்து சிவ தரிசனத்திற்கு வழிசெய்ததாகக் கூறப்படுகிறது. திருவிடைமருதூர் மஹாலிங்க மூர்த்தியை நித்யம் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். அந்த மூர்த்தியே இவருக்கு பிரத்யக்ஷ தெய்வம்.
இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதசமஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லக்ஷணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா என்று பல பக்தி நூல்களை எழுதியிருக்கிறார். இவரது சிவபக்தி, சிவ நாமஜபம், கீர்த்தனம் போன்றவையே இவரைப் பெருமைப் படுத்தியதாக அவரே சொல்லியிருக்கிறார் என்கின்றனர். பக்திக்கு இலக்கணமான சகல உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சிவார்பணம் செய்து பிறருக்கு அளித்துவிடுவாராம். தனது ஏழ்மை நிலையிலும் ஸ்வதர்மத்துடன் கூடிய கிருஹஸ்த தர்மத்தை விடாது, சிவார்ப்பணம் செய்து பற்றற்றவராக விளங்கினார். இதனாலேயே பண்டிதர்களும், பாமரர்களும் இவர் மீது மிகுந்த பக்தி கொண்டனர்.
ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார். சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை. மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர். ஐயாவாள் தமது கர்மா நிறைவடைவதற்காக கூர்ச்சங்களில் மூதாதையர்களை வரித்து சிராத்தத்தை நடத்தி முடிக்கிறார். ஆனால் அன்று மாலை மஹாலிங்கத்துக்கு பூஜை செய்ய நடை திறந்த அர்ச்சகர்கள், சன்னதியில் புலையன் வைத்திருக்கும் சில பொருட்களையும், புது வஸ்த்ரம், வெற்றிலை பாக்கு (ஐயாவாள் சிராத்தத்தில் அளித்தவை) போன்ற இருந்ததைக் கண்டு தெளிகின்றனர்.
இறைவனே தெரிய வைத்த பின்னரும், ஊரார் விருப்பப்படி கங்கையில் ஸ்நானம் செய்து பிராயச்சித்தம் செய்ய எண்ணி, ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து, திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்! அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள். இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்ததுபோல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்
அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா
என்று ஸ்தோத்திரம் செய்கிறார். அதாவது உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும், கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும், என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும், பிறர் தோஷங்களை அறியாதவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும், பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும், உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும் எப்போது நான் மாறுவேன் க்ருஷ்ணா என்று கேட்பதாகப் பாடுகிறார். இவ்வாறாக இந்த நேரத்தில் அவர் க்ருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "க்ருஷ்ண த்வாதச மஞ்சரி" என்று கூறப்படுகிறது. அங்கு இருந்த ஊரார் இவரது ஸ்தோத்திரங்களை கேட்டு, அவரது, வினயம், பக்தி போன்றவற்றைப் பார்த்து, அரசர் உட்பட, வைஷ்ணவத்தைப் பழிப்பதாகச் சொன்னவர்கள் உட்பட எல்லோரும் அவரது உன்னத பக்தியினை உணர்ந்து அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினராம்.
இதே போல திருவிசைநல்லூரில் வசிக்கையில் அங்கிருந்த பண்டிதர்களுக்கு ஐயாவாளிடம் பொறாமை உண்டாகியிருக்கிறது. ஒரு கோகுலாஷ்டமி தினத்தில் விழாவிற்க்கு ஐயாவாளையும் அழைத்திருக்கின்றனர். ஆழ்ந்த பக்தி இல்லாது வெறும் டாம்பீகமான விழாவாக தோன்றியதால் ஐயாவாள் அதில் பங்கேற்காது விட்டு விடுகிறார். வாசலில் க்ருஷ்ணன் ஊர்வலமாக வருகையில் ஐயாவாள் இறைவனை வணங்க வருகிறார். ஆனால் விழாவை நடத்தினவர்கள் கோபித்துக் கொண்டு, உமக்கோ க்ருஷ்ண பக்தி கிடையாது, இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று மறுத்துப் பேசுகின்றனர். ஐயாவாள் அவர்களிடம் தனது க்ருஷ்ண பக்தியை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று உள்ளே சென்றுவிடுகிறார். உடனே தன் கண்களையே க்ருஷ்ணனின் தோழியாக பாவித்து கோபிகா பாவத்தில் க்ருஷ்ணனனை நினைத்து, "என் ப்ரியசகியான த்ருஷ்டியே, நீலோத்பலம் போன்ற அழகிய காந்தியுடையவனும், சந்த்ர பிம்பத்தைவிட அழகான முகமுடையவனும், நந்தகோபன்-யசோதையின் ஆனந்தத்திற்கு காரணமான கருணாமூர்த்தியான க்ருஷ்ணனை அனுபவி என்று பாடுகின்றார். திடிரென ஊர்வலத்தில் இருந்தவர்கள், தமது விக்ரஹத்தின் பீடம் மட்டும் இருப்பதை காண்கின்றனர். அதே சமயத்தில் ஐயாவாள் பாடுவதும் காதில் விழ, அவர்கள் ஐயாவாள் இல்லத்திற்குள் சென்று பார்த்தால் அங்கு விக்ரஹம் இருக்க ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருப்பதை கண்டு பிரமிக்கின்றனர். அவரது பக்தியை உணர்ந்த பண்டிதர்கள், தமது ஊர்வலத்தை விட்டு அங்கேயே இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனம் செய்து ஐயாவாளிடம் மன்னிப்பும் கேட்டனர். இந்த நிகழ்வின் போது ஐயாவாள் பாடியதுதான் "டோலோ நவரத்ன மாலிகா" என்று சொல்லப்படுகிறது.
திருவிசநல்லூரில் இருந்த காலத்தில் தினம் திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை தவறாது தரிசனம் செய்தார். ஒருநாள் அதிக மழையின் காரணமாக அவர் காவிரியைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலாது தவித்து தாம் ஏதோ சிவாபராதம் செய்திருப்பதாக கலங்குகிறார். அப்போது அவர் செய்த ஸ்தோத்திரம் தான் "ஆர்த்திஹர ஸ்தோத்திரம்" என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கோவில் அர்ச்சகர் தோற்றத்தில் ஈஸ்வரனே வந்து பிரசாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது. மறுநாள் கோவிலுக்குச் சென்று அந்த அர்ச்சகரிடம் பேசுகையில் அவர் வரவில்லை என்றும் வந்தது சர்வேஸ்வரனே என்று உணர்ந்து, ஈசனது தயை போற்றும் விதமாக செய்ததே "தயா சதகம்" என்னும் 100 ஸ்லோகங்கள்.
இவ்வாறாக திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை அர்த்த ஜாம பூஜையில் தரிசிப்பதை வழக்கமாக கொண்ட ஐயாவாள், ஸம்சாரம் என்னும் விசாலமான நாடகமேடையில் எல்லா ரூபங்களும் தரித்து ஆடிப்பாடி களைத்து விட்டேன். சர்வக்ஞனும், தயாபரனுமான நீ போதும் என்று கூறி என்னை ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் என்று கூறி குமுறிக் குமுறி அழுகிறார். மற்றவர்களுக்கு ஐயாவாள் அழுவதன் காரணும் ஏதும் அறியவில்லை என்றாலும் அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அப்போது ப்ரேம பக்தியில் உன்மத்தமான ஐயாவாள் தீடீரென கர்ப்பகிரஹத்தை நோக்கி சென்று மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய முற்பட்டு, அப்படியே ஜோதிவடிவில் பரமேஸ்வரனை அடைந்தார் என்று கூறப்படுகிறது.
கலியில் நாம ஸ்மரணைதான் சுலபம், அதனை விடாது செய்து, எல்லாம் வல்ல இறையினை உணர இந்த மஹான் அருளட்டும்.
No comments:
Post a Comment