Sunday, 19 July 2015

64 சிவ வடிவங்கள் (37)

 இலகுளேஸ்வர மூர்த்தி




நம்முடைய பூமியைப் போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் அளவிட முடியாத பரந்து விரிந்துள்ள வானில் உள்ளன. இவை அறிவியல் பூர்வமான உண்மையாகும். இதையே ஆன்மிகத்தோடு இணைத்து பார்ப்போம். இவ்வுலகம் எட்டுக்கொண்டது திரசரேணு, திரிசரேணு எட்டுக் கொண்டது லீகை, லீகை எட்டுக் கொண்டது யவை, யவை குறுக்குவாட்டில் எட்டுக் கொண்டது மானங்குலம் மானங்குலம் இருபத்தி நான்கு கொண்டது முழம், முழம் நான்கைக் கொண்டது வில், வில் இரண்டுடையது தண்டம், தண்டம் இரண்டாயிரம் கொண்டது குரோசம், குரோசம் இரண்டுடையது கெவியூதி, அக்குரோசம் நான்கைக் கொண்டது யோசனை, யோசனை நூறு கோடி கொண்டது நிலத்தின் தத்துவத்தின் விரிவாகும்.

பஞ்சபூதங்களைக் கொண்ட ஆயிரமாயிரம் பேரண்டங்கள் உலகில் உள்ளன. பொதுவாக பத்து (புவனங்கள்) உலகங்கள் மேலேயும், பத்து உலகங்கள் கீழேயும் இருக்கும் அதுத்தவிர ஈசானத்தில் பத்தும், வடக்கு, வாயுமூலை, மேற்கு, நிருதிதிக்கிலும், தெற்கிலும், அக்னிமூலையிலும், கிழக்கிலும் முறையே பத்து பத்து உலகங்கள் இருக்கும். இவைத்தவிர எண்ணிலடங்கா உலகங்கள் இருக்கின்றன. அந்த உலகங்கள் ஆயிரக்கணக்கான பேரண்டத்தில் பரவியுள்ளன. 

அதில் நடுநாயகமான சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரது திருமேனியைக் காணக் கண்கள் ஒளியிழக்கின்றன. அவ்வாறான ஒளிவெள்ளத்தின் நடுவே அவர் வீற்றிருக்கும் கோயிலின் விரிவு அநேக கோடியமாகும், அந்தத் திருமேனியின் அளவு அநேக கோடியாகும். அவர் வலப்புறமாக மழுவும், சூலமும், இடப்புறமாக கலசமும் கொண்டு இவ்வுலகிலுள்ள உயிரினங்களின் மும்மலங்களைப் போக்கும் நல் ஞானாசிரியனாக அவர் வீற்றிருக்கிறார். 


இத்தகைய பெருமையுடன் ஒவ்வொரு அண்டத்திலும் ஒருவராக எழுந்தருளி அங்குள்ள உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அருளாட்சி செய்யக்கூடிய மூர்த்தியே "இலகுளேஸ்வர மூர்த்தி யாகும். இவரை தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றம் என்ற ஊரில் காணலாம். இறைவன் பெயர் சிவக்கொழுந்தீசர், இறைவி பெயர் பெரிய நாயகி ஆவார். இங்கமைந்துள்ள சூலதீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு அர்ச்சனை செய்ய திருமணத்தடை விலகும். இவர்க்கு மகாவில் வார்ச்சனையும், முக்கனிப்படையல் நைவேத்தியமும் புதன்கிழமைகளில் செய்ய மும்மலம் மறைந்தோடும் பதவியை தக்க வைக்க முடியும்

Saturday, 18 July 2015

64 சிவ வடிவங்கள் (36)

 காமதகன மூர்த்தி


பார்வதிதேவியார் பர்வத மன்னனின் மகளாகி இமயமலையில் சிவபெருமானையே கணவனாக எண்ணி தவத்தில் இருந்தார். இங்கு சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு யோக முறையை விளக்கி அந்நிலையிலேயே இருந்தார். அவரால் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே யோகநிலையில் இருந்தன. இதனால் உலக இயக்கம் நின்றது, நான்முகனின் படைப்புத் தொழிலும் நின்றது. 

இதனால் கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானை பார்க்க அனுமதிக்குமாறு நந்திதேவனை வேண்டினர். நந்திதேவன் மறுத்திடவே அனைவரும் சிவதியானத்தில் ஈடுபட்டனர். உடன் இந்திரன் கனவில் சிவபெருமான் தோன்றி பார்வதியை திருமணம் செய்வோம். எங்கள் மகனால் இத்துயரம் தீரும் என்றுரைத்தார். பின்னர்  இந்திரன் அனைத்து தேவர்குழாமுடன் சென்று நான்முகனிடம் ஆலோசனை கேட்க நான்முகனோ மன்மதன் சிவபெருமான் மீது பாணம் விட்டால் அவரது யோகம் கலையும். உலகம் முன்போலவே இயங்கும் என்று  ஆலோசனைக் கூறினார். இதனால் மன்மதனும் வந்தார். பாணம் விட மறுத்தார். இறுதியில் உலக நன்மைக்காக அந்தக்காரியத்திற்கு ஒத்துக் கொண்டார். யோக நிலையிலுள்ள சிவபெருமானிடம் சென்றார். அவரை மேற்கு வாசல் வழியே நந்திதேவர் உள்ளனுப்பினார் சென்றவுடன் அவர் மீது பாணம் விட, சிவபெருமானின் யோகம் கலைந்தது. அதனால் கோபப்பட்ட அவர் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். பின்னர் பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி வேண்டினார். அதன்படி மன்மதன் மீண்டும் உயிர்த் தெழுந்தார். உடனே ஒரு நிபந்தனை விதித்தார். ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர்க்கு அரூபமாகவும் இருக்கும்படி நிர்பந்தித்தார். 

மன்மதனை எரித்ததால் சிவபெருமானுக்கு காம தகன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது, இவரை மாயமவரம் அருகே உள்ள குறுக்கையில் காணலாம். இவரை வணங்கினால் அளவுக்கதிகமான காம உணர்வு அடங்கும். சிவத்தில் ஐக்கியமாக விரும்பும் ஆன்மாக்கள் இவரை வணங்க, காமம் தலைதூக்காது. இவர்க்கு தேனாபிசேகமும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொடுக்க உடன் பிறந்தோருடைய அன்பு மேலோங்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

Sunday, 12 July 2015

64 சிவ வடிவங்கள் (35)

காலந்தக மூர்த்தி


மிருகண்டு முனிவர் என்பவர் மருத்துவதி என்னும் பெண்ணைத் திருமணம் செய்தார். ஆண்டுகள் பலவாகியும் குழந்தையில்லாத காரணத்தால் மிருகண்டு காசி சென்று குழந்தை வேண்டி தவமியற்றத் துவங்கினார். தவத்திற்கு மெச்சி சிவபெருமான் காட்சிக் கொடுத்து என்ன வேண்டும் என்றுக் கேட்டார். குழந்தை வேண்டுமென்றதும் முனிவரே தீயகுணம், உடல் நோய், ஐம்பொறி ஊனம், அறிவின்மை இவற்றுடன் நூறாண்டு வாழும் பிள்ளை வேண்டுமா? அல்லது அழகு, அறிவு, நோயின்மை, எம்மருள் கொண்ட பதினாறு வயது வரை ஆயுள் கொண்ட பிள்ளை வேண்டுமா என கேட்க முனிவரோ பதினாறு வயது வரை ஆயுள் கொண்ட பிள்ளையே வேண்டுமென்றார். உடன் வரம் கொடுத்து மறைந்தார். பின் சிறிது நாளில் ஒரு நல்ல சுபமுகூர்த்த தினத்தில் மருத்துவதி அழகான பிள்ளையைப் பெற்றெடுத்தார். தேவர்கள் பூமாரி பொழிந்து, தேவதுந்துபி இசைத்து வரவேற்றனர். நான்முகன் அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டார்.

மார்க்கண்டேயன் நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளரத்துவங்கினான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்னக்காரணம் என்றுக் கேட்க. பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாககக்க கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகையருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்குக என்று வரமளித்தார். பின் ஊர் திரும்பினார். அங்கும் வழிபாட்டைத் தொடர்ந்தார். இவ்வாறிருக்கும் போது அவனது ஆயுள் முடிவடையும் சமயத்தில் எமதூதன் அழைத்தான். பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக்கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும், எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை அசைக்க கூட முடியவில்லை முடிவாக எமனே வர மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவிக் கொண்டான். உடன் சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்தார். இதனால் எமன் இறந்தான். உடன் பூமியில் மரணம் நிகழாததால் பூமியின் எடைக் கூடிக் கொண்டே சென்றது. பாரம் தாங்காத பூமாதேவி சிவபெருமானை வேண்டினார். உடன் எமன் உயிர்த்தெழுந்தான் மிருகண்டு மகனான மார்க்கண்டேயனுக்கு நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார். 

மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்த கோலமே காலந்தக மூர்த்தி யாகும். அவரை வணங்க நாம் சொல்ல வேண்டிய தலம் திருக்கடவூர் ஆகும். இத்தலம் மாயவரம் அருகேயுள்ளது. எமபயம் நீங்க இத்தல இறைவனை வணங்க வேண்டும். ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என அனைவரும் எமபயம் நீங்க இங்குள்ள இறைவனை தினமும் வழிபடுவதாக ஐதீகம். இங்கு அறுபது வயதைக் கடந்தோர் சஷ்டியப்த பூர்த்தி விழாவினை இங்கு வந்துக் கொண்டாடுகின்றனர். செந்தாமரை மலர் அர்ச்சனையும், தேங்காய், மஞ்சள், பூ நைவேத்தியமும் வெள்ளிக்கிழமைகளில் கொடுக்க ஆயுள் அதிகரிக்கும். எமபயம் நீங்கும்.

Monday, 6 July 2015

64 சிவ வடிவங்கள் (34)

வீணா தட்சிணாமூர்த்தி



திருக்கையிலையில் பக்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள் செய்ய தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளினார். அப்போது நாரதர். சுக்ரமுனிவர்களின் இசைஞானத்தை உணரவும், சாமவேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப்பாடவும் தங்களுக்கு அருள்புரிய வேண்டினார். உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையையும், இசைக்கலையைப் பற்றியும் கூறத் தொடங்கினார். அப்போது எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும். அதனால் என்னப் பலன், என்றும் எம்மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக்குற்றம் ஏற்படுமென்னும் விளக்கிக்கொண்டு வந்தார். அப்போது கொன்றை, கருங்காலி மரங்களால் வீணை செய்ய வேண்டும் என்றார். அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட நால்வகை வீணைகளையும் செய்யலாம் என்றார். 

அந்த நால்வகை வீணையாவன பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பனவாகும். இதில் பேரியாழுக்கு 21 நரம்பும், மகரயாழுக்கு 17 நரம்பும், சகோடயாழுக்கு 16 நரம்பும், செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்கவேண்டும். மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசையெழுப்ப வேண்டும். முக்கியமான வீணையுடன் பாடும்போது உடல் குற்றம் இல்லாமலும், பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் ஒரு பாடல் அமைய வேண்டும் என்பது மரபு. 

இவ்வாறாக வீணையைப் பற்றியும், இசையைப் பற்றியும், அதன் பாடல்களைப் பற்றியும், அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் எடுத்துரைத்து விரிவாகக் கூறி அந்த வீணையை தோளின் மீது வைத்து இசையெழுப்பி பாடிக்காட்டினார். இதனைக்கண்ட, கேட்ட அனைவரும் ஆனந்தப்பட்டனர். தங்கள் கண்களையே நம்பமுடியாமல் ஆச்சர்யப்பட்டனர். இவ்வாறு நாரதர், சுகர் பொருட்டு வீணையுடன் காட்சிதருவதால் அவர்க்கு வீணா தட்சிணாமூர்த்தி என்றப் பெயர் உண்டானது.

திருச்சிக்கருகேயுள்ள லால்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் வீணா தட்சிணாமூர்த்தி இருக்கின்றார். இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக்கிழமைகளில் இவர்க்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

Sunday, 5 July 2015

64 சிவ வடிவங்கள் (33)

யோக தட்சிணாமூர்த்தி


சிவபெருமான் திருக்கையிலையில் தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கும் போது நான்முகனின் நான்கு மகன்களான சனகாதி முனிவர்களுக்கு பதி, பசு, பாசம் பற்றி உபதேசித்துக் கொண்டே வந்தார். அப்போது அவர்கள், இறைவா ! எங்கள் மனம் விரிவடைந்துள்ளது, ஆகையால் அவை ஒடுங்கும் யோக மார்க்கங்களை எங்களுக்கு உரைக்கவும் என்று விண்ணப்பித்தனர். உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த சிவபெருமான் கீழ்கண்டவாறு யோக மார்கங்களை கூறலானார். அவையாவன யோகம் என்பது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கலப்பது. அது எப்படியெனில் வெளிக்காரணத்தை அந்தக்காரணத்தில் அடக்கி மனதை ஆன்மாவில் அடக்கி தூய்மையான ஆன்மாவை பரத்தில் சேர்த்தலாகும். அத்துடன் யோகப்பயிற்சி இருந்தால் மட்டுமே பரம்பொருளை தரிசிக்க முடியும்.

தசவாயுக்களான பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனும் தசவாயுக்களை அடக்குவது யோகமாகாது. யோகத்தை எட்டாகப் பிரிக்கலாம் அவை இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாம் இவற்றில் இயமம் என்பது கொல்லாமை, பிறர்பொருளுக்கு ஆசைப்படாமை, நியமம் என்பது தவநிலை, ஆதனம் என்பது சுவந்திகம், கோமுகம், பதுமம், வீரம், பத்திரம், முத்தம், மயூரம், சுகம் என எட்டாகும், பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, பிரத்தியாகாரம் நம்மைப் பார்ப்பது, தாரணை என்பது ஏதாவது, ஒரு உடலுறுப்பின் மீது சிந்தையை வைப்பது, தியானம் என்பது மனத்தை அடக்குதல், சமாதி என்பது மேற்சொன்னவற்றுடன் பொறுத்தி ஆதார நிலையங்கள் ஆறுடன், நான்கு சக்கரங்களை வியாபித்து அனைத்துமாகிய, சகலமான பரம்பொருளை தியானித்தலே சிவயோகம் என்றழைக்கப்படும் சமாதி நிலையாகும். இவ்வாறு யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு உரைத்ததுடன் தாமே சிறிது நேரம் அந்நிலையில் இருந்து காட்டினார். இதனால் விரிவடைந்த மனம் ஒடுங்கியது. உடனே சனகாதி முனிவர்கள் சிவபெருமான் பாதத்தைத் தொட்டு வணங்கி விடைபெற்றனர். சனகாதி முனிவர்களுக்குப் புரியும்படி யோக முறையை கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே "யோக தட்சிணாமூர்த்தி யாகும்.

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது குறுக்கை. இங்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளது. இவர் கிரகங்களுக்கே அதிபதியாவார். இவர் யோக நிலையில் காணப்படுவதால் பெரும்பலம் பொருந்தியவர். வியாழன்தோறும் விரதமிருந்து இவரை வணங்க பிறவித் துன்பம் தீரும். வெண்தாமரை அர்ச்சனையும், கொண்டைக்கடலை (அ) தயிரன்ன நைவேத்தியமும் வியாழன் தோறும் கொடுக்க கட்டுப்பாடாக, ஒழங்காக வாழ்க்கை அமையும். இங்குள்ள மூர்த்திக்கு பச்சைகற்பூர நீரால் அபிசேகம் செய்ய யோக சித்திகள் வாய்க்கப்பெறும்

Wednesday, 1 July 2015

64 சிவ வடிவங்கள் (32)

தட்சிணாமூர்த்தி


சிவபெருமானுடன் கையிலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பார்வதி தேவியார். அப்பொழுது சிவபெருமானிடம் ஐயனே தட்சனின் மகளானதால் தாட்சாயினி எனும் பெயர் எனக்கு ஏற்பட்டது. தங்களை அவமதித்த தட்சனின் இப்பெயரை வைத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை எனவே அப்பெயர் மாறும் வண்ணம் வரம் வேண்டுமெனக் கேட்க உடன் சிவபெருமானும் பார்வதி மலை மன்னன் குழந்தை வரம் வேண்டி தவமிருக்கிறான், அவனுக்கு நீ மகளாகச் செல். பின் நான் வந்து மணமுடிப்பேன் என்றுக் கூறி அனுப்பினார். அங்கே குழந்தை உருவில் வந்த பார்வதி தேவி வளரத் துவங்கினார்.

இதற்கிடையே நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்கள் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். இருப்பினும் அவர்களது மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினார். உடன் சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் சென்று மன்மதனைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்றுக் கட்டளையிட்டு வந்து சனகாதியர்க்கு பதி, பசு, பாசம் இவற்றையெல்லாம் விளக்கி விரிவாகக் கூறினார். உடன் அவர்கள் மேலும் மனம் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்யச் சொன்னார்கள். உடனே சிவபெருமான் இதைக் கேட்டவுடன் மெல்லிய புன்னகைப் புரிந்து "அப்பொருள் இவ்வாறிருக்கும் என்றுக் கூறினார். பின்னர் மேலும் புரியவைக்க தன்னையே ஒரு  முனிவன் போலாக்கி தியானத்தில் ஒரு கணநேரம் இருந்தார். அதே நிலையிலேயே அந்த நால்வரும் இருந்தனர். அப்போது மன்மதன் உள்ளே வந்து சிவபெருமான் மேல் பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் அவனை நெற்றிக் கண்ணாலே எரித்தார். சிவபெருமான் அந்நிலை நீங்கி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். 

இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தால் அவரது பெயர் "தட்சிணாமூர்த்தி ஆயிற்று. இவரை தரிசிக்க செல்லவேண்டிய தலம் "ஆலங்குடி யாகும், குடந்தை-நீடாமங்கலம் வழியாக இவ்வூர் உள்ளது. இறைவன் காசியாரணியர். இறைவி உமையம்மையாவார். இங்கு நடைபெறும் குருபெயர்ச்சி விசேசமாகும். சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இருபத்தி நான்கு நெய் விளக்கு ஏற்ற திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும். வெண்தாமரை அர்ச்சனையுமும் தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க நினைவாற்றல் பெருகும்.

இந்த தட்சிணாமூர்த்தி முன் நீர் ஆரத்தி எடுத்து தீபம் ஏற்ற தடைபெற்ற திருமணம் நடைபெறும், புத்திரப் பேறு கிடைக்கும்